Wednesday 5 February 2020

கலகக்கார மாணவர்களும் கயவாளி காவி கும்பலும்


கலகக்கார மாணவர்களும் கயவாளி காவி கும்பலும்
இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கவும் RSS, BJPயின் இந்து சங் பரிவார கனவை நிறைவேற்றவும், நூரெம்பர்க் குடியுரிமை சட்டம், பதிவேடு மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திட்டங்களை கொண்டுவந்து கொக்கரிக்கிறது.

கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க நாடெங்கும்  பாசிசத்திற்கு எதிரான மாணவர்களின், மக்களின் கோபக் கனல்  CAA, NRIC, NPR சட்ட திட்டங்களைப் போராட்டத் தீயில் பொசுக்கி வருகிறது. 



குடிகெடுக்க வந்த குடியுரிமைச் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைப்போம்
டெல்லியிலுள்ள ஜாமியா, அலிகார், ஜே.என்.யூ பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உறுதியுடன் போராடி வருகிறார்கள். ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டங்களில், பெண்கள் பெரும்பாலானவர்களாகவும் முன்னணியாகவும் பங்கு கொள்கிறார்கள். இப்போராட்டம் டெல்லி மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்கள் மீதும், முன்னணியாளர்கள் மீதும் கோரமான ரத்தவெறி பிடித்த ஆளும் வர்க்க ஓநாய்கள் வன்முறைத் தாக்குதலை நடத்தினார்கள். இப்போராட்டத்தில் அதிக அளவில் பெண்கள் பங்கு கொண்டார்கள் என்பதால் பெண்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்  நடத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் போராட்டத்தினை கலவரம் என்று நாடகமாட பேருந்துகள், பைக்குகள், போலீஸ் வேன்கள் போன்ற பொதுச்சொத்துக்களை காவி காவல்துறை தீக்கிரையாக்கியது. இதற்குக் காரணம் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றும், தேச விரோதிகள் மக்கள் சொத்தை சேதப்படுத்துகிறார்கள் என்றும் வழக்கம் போல உடனடியாக பாஜக அமைச்சர்கள் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தொலைக்காட்சிகளில் காவல்துறை பொதுச்சொத்துகளுக்கு தீவைத்த செய்திகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட கலவரங்களுக்குக் காரணம் மாணவர்கள் என்று பொய் வழக்குபோட்டது இந்துத்துவ வானரப்படை காக்கி கங்காணிகள்.
அலிகார், பாட்னா மற்றும் தமிழகத்தில் பாரதியார், சென்னை மற்றும் பாண்டிசேரி பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களின் போது தங்களின் பட்டங்களை வாங்க மறுத்தனர் மாணவர்கள். மேலும் விழா மேடையில் CAA, NRIC சட்ட நகல்களை கிழித்து ஆளும் வர்க்கங்களின் முகத்தில் வீசியெறிந்தனர்.

மாணவர்கள் போராட்டத்தால் மானமிழந்த மத்திய அரசு
கடந்த 2019 அக்டோபர் மாதம் முதல் டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜே.என்.யூ பல்கலைக்கழகம் அக்டோபர் மாதம், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உட்பட அனைத்து விதமான பல்கலைக்கழக கட்டணங்களையும் 100 மடங்கு உயர்த்தியது. இந்த அநியாய கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்; மேலும் பல்கலைகழகத்தினை தனியார்மயமாக்க கூடாது  என்று மாணவர்கள் போராடத் துவங்கினார்கள். வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம் என போராட்டம் தீவிரம் அடைந்ததை உணர்ந்த பல்கலைக்கழகம் 50% கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக நயவஞ்சக நாடகத்தை துவக்கியது. இந்த போலியான கட்டண குறைப்பை ஏற்க மறுத்து, முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என  போராட்டம் மிக உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளதை அறிந்த பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஜே.என்.யூவுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் இயக்கத்தை நிறுத்தியது. மேலும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. மாணவர்கள் உடனடியாக விடுதியை காலி செய்ய வேண்டும் என்று வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் எந்த வித சதி வேலைகளாலும் மாணவர் போராட்டத்தை தடுக்க முடியாது என்பதை மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
CAA சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அதுவரை மாணவர்கள் நலன் சார்ந்த  கோரிக்கைக்காக போராடி வந்தவர்கள் CAA, NRICக்கு எதிரான அரசியல் போராட்டமாக தங்களின் போராட்டத்தை வளர்த்தெடுத்தார்கள். அதுவரை மூச்சுவிடவே திணறி வந்த மாசடைந்த மாநகரம்மாணவர்கள் போராட்டத்தில் தூய்மையடைந்து நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து மென்மேலும் மக்கள் ஆதரவைப் பெற துவங்கியது. இந்த கிளர்ச்சி போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்து ஆளும் வர்க்கங்களை எரிச்சலூட்டியது‌‌. ஏனென்றால், மாணவர்கள் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பல திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் எழுச்சி பெற்று மத்திய மாநில தரகு முதலாளித்துவ கட்சிகள் வீதியில் தூக்கி வீசப்பட்ட வரலாற்றை நன்கு அறிவார்கள். தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்ற மாணவர் போராட்ட வரலாறு முத்திரை பதித்துள்ளன.

எங்கு மீண்டும் அதுபோன்ற மாணவர் போராட்டங்கள் மக்கள் ஆதரவு போராட்டங்களாக  மாறிவிட்டால் தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய மோடி ஆட்சி, மாணவர் போராட்டங்களில் வன்முறையை ஏவி கலவரங்களை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்‌.எஸ்., பி‌.ஜே‌.பியின் கழிசடை கும்பலான ஏ.பி.வி.பியை கொண்டு CAA, NRICக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தியது. இது யாரும் சீண்டாத சாக்கடையாக புறக்கணிக்கப்பட்டது. ஆனால் CAA, NRICக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மக்கள் மத்தியிலும் ஆதரவை பெறத் துவங்கியது. இப்படியே போராட்டம் தொடர்ந்தால் தங்கள் அரசியல் எதிர்காலம் இருண்டு விடுமோ என்று அஞ்சிய சங் பரிவார ரவுடி கும்பல்கள், மாணவர்கள் போராட்டத்தின் மீது பொய் பிரச்சாரத்தை பரப்பி வந்தது. ஆனால் மாணவர் போராட்ட வெள்ளத்தில் இந்த போலி பிரச்சாரம் அடித்து செல்லப்பட்டது‌‌.

எவ்வாறாகினும் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்று எண்ணிய சங் பரிவார ரவுடி கும்பல்கள்  வன்முறை வெறியாட்டத்தை ஜனவரி 5 இரவில் போலீஸ் உதவியுடன் சபர்மதி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்தன. 50-க்கும் மேற்பட்ட குண்டர் படை ஊர்வலமாக சென்று போராட்டக்காரர்களை வசைபாடி முழக்கமிட்டுக் கொண்டே போலீஸ் உடையிலும், முகமூடி அணிந்தும் மின்சாரங்களை துண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் காஷ்மீர் மாணவர்களை தேடித் தேடி தாக்கியதும், மாணவர் தலைவர்களை குறிவைத்து தாக்கியதும், மாணவர்களின் புத்தகங்கள், உடைமைகள், பொருட்கள், போராட்ட பதாகைகள் என விடுதியையும் சூறையாடின. இந்த தாக்குதலில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
மாணவர் தலைவர் அய்ஷி கோஷ்கடும் தாக்குதலுக்கு உள்ளான போதும் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்காமல் அடுத்த நாளே போராட்டக் களத்தில் முன்னின்று ஆளும் வர்க்கத்துக்கு எதிராக முழங்கி இரத்தவெறி பிடித்த பாசிச ஓநாய்களுக்கு செருப்படி கொடுத்தார்.
எதிர்ப்புரட்சிகர வன்முறையை அமைதி வழியில்  வெல்லமுடியாது! புரட்சிகர வன்முறையால் தான் வெல்லமுடியும்!!
இந்த ரத்த வெறி தாக்குதலுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் செயலர், டெல்லி போலீஸ் துணைபோயின. தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ரக்‌ஷாதள் அமைப்பு குண்டர்களை கைது செய்யாமல் போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது  வெட்கங்கெட்ட பாஜக அரசு.
மாணவர்கள் போராட்டத்தின்  மூலம் அநியாய கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ளது ஜே.என்.யூ பல்கலைக்கழகம். இது CAA, NRICக்கு  எதிரான போராட்டத்தினை நீர்த்துபோக வைக்க நடக்கும் நயவஞ்சக நாடகமே ஆகும்.

அசாம், டெல்லி, தமிழ்நாடு  உள்ளிட்டு நாடெங்கும் போராடும் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் வஞ்சம் தீர்க்கும் தாக்குதல் மற்றும் தூப்பாக்கி சூடு நடத்தி 20க்கும் மேற்ப்பட்ட போராட்டக்காரர்களை கொன்று குவித்துள்ளது.  இவ்வாறு மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி கலவரங்களை தூண்டிவருகிறது இந்துத்துவ மோடியின் காட்டாட்சி.
இந்துத்துவப் பாசிச ரத்தவெறி பிடித்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய  சங் பரிவார குண்டர்கள் மீது வழக்கு போடாமல், போராடிய மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளது மோடி அரசு. ஜோடிக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதற்கும் மானவர்கள் போராட வேண்டும்
எதிர்புரட்சிக்கர பாசிஸ்டுகளின் வன்முறை  தாக்குதல் நம்மை காயப்படுத்தும் போது அதை புரட்சிகர வன்முறையால்தான் முறியடிக்க முடியும். இதை மறுப்பது ஜனநாயகமும் அல்ல; மார்க்சியமும் அல்ல. அது திருத்தல்வாதமே. இவர்களை புறந்தள்ளி வன்முறை என்பது போராட்டத்தின் ஒரு வடிவமே என்று அநியாய வன்முறைக்கு எதிராக நியாயமான வன்முறையை கட்டமைப்போம். அஞ்சுவதும் இல்லை அடிபணிவதும் இல்லை என்று ஆர்ப்பரிப்போம். போராட்ட தீ கொண்டு பொல்லாத போக்கிரிகளை கொளுத்திடுவோம். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட பேரலையால் பேயாட்சியை வீழ்த்திடுவோம். குடியுரிமை சட்டத்திற்கு சேவை செய்யும் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் நடத்தி வரும் வீரம் செறிந்த போராட்ட நெருப்பை நாடெங்கும் பரவச் செய்வோம்.

சமரன்
ஜனவரி 2020

No comments:

Post a Comment