Monday 13 July 2020

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் - பாகம் 5

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்

பாகம் 5

 

மனோகரன் கூறுவது: ஸ்டாலினின் எதேச்சதிகாரப் போக்கும், பாசிசத்தை எதிர்த்த ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும் இடது வலது விலகலைக் கொண்டதேயாகும்.

அதன் விளைவாக போல்ஷ்விக் கட்சிக்குள்ளும், சோவியத் ஒன்றியத்திலும், உலக அளவிலும் கடும் பாதிப்புகளை கொண்டுவந்தது. வர்க்கப் போராட்டம் உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் நடத்துவதில் ஏற்பட்ட விலகல் போக்குகள் சோசலிசத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் தடைகளை ஏற்படுத்தியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ சக்திகள் பலம்பெற்று முதலாளித்துவ மீட்சியை சோசலிச நாடுகளில் கொண்டுவந்தன.

இவை மாவோ மற்றும் ஏ.எம்.கே. நிலைபாட்டிற்கு எதிரானதாகும். மாபெரும் விவாதம் நூலில், ஸ்டாலினைப் பற்றிய பிரச்சினையின் மீது என்ற கட்டுரையில் பக்கம் 326-328இல் மாவோ கூறுவதாவது:

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுதலித்ததின் மிகக் கடுமையான பின்விளைவுகளை ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு நடந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டுகின்றன.

அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களுக்கும் மிதமிஞ்சிய வரவேற்கத்தக்க ரசிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு தோட்டாக்களை வழங்கியுள்ளது. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு வெகு குறுகியகாலத்திலேயே குருச்சேவின், ஸ்டாலின்-எதிர்ப்பு ரகசிய அறிக்கையை ரசிய நாட்டிற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக ஒரு உலகு தழுவிய பேரலையை உசுப்பிவிட ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஏகாதிபத்தியவாதிகளும் அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும், டிட்டோ கும்பலும், பல்வேறு ரகமான சந்தர்ப்பவாதிகளும் ரசிய நாட்டைத் தாக்குவதற்கும், சோசலிச முகாமைத் தாக்குவதற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தாக்குவதற்கும் இந்த வாய்ப்பைத் தாவிப்பிடித்துக் கொண்டார்கள்; இவ்வாறு பல சகோதரக் கட்சிகளும். நாடுகளும் கடும் சங்கடங்களில் தள்ளப்பட்டன.

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களால் ஸ்டாலினுக்கு எதிராகச் செய்யப்பட்ட வெறித்தனமான பிரச்சாரத்தினால் நீண்ட காலமாக அரசியல் சவங்களாகக் கிடந்த டிராட்ஸ்கியவாதிகள் மீண்டும் உயிர்பெற்று டிராட்ஸ்கிக்கு புனர்வாழ்வுகொடுக்கக் கூக்குரலிடுகின்றனர். 1961 நவம்பரில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்தின் முடிவில் சொல்லிக் கொள்ளப்படும் நான்காவது அகிலத்தின் சர்வதேசச் செயலகம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்திற்கும் அதன் புதிய மத்தியக் கமிட்டிக்கும் எழுதிய கடிதத்தில் ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டவர்களைக் கௌரவித்து ஒரு நினைவு சின்னம் எழுப்பப்படும் என்று 1937இல் டிராட்ஸ்கி சொன்னார் என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும் தொடர்ந்து இன்று இந்தத் தீர்க்கத் தரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு உங்கள் கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்என்று குறிப்பிட்டது. இந்தக் கடிதத்தில், ஸ்டாலினால் பலி கொள்ளப் பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுவப்படும் நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்கியினுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்என்று குறிப்பாகவே கோரப்பட்டுள்ளது. டிராட்ஸ்கியவாதிகள் தங்கள் மகிழ்ச்சியை மறைக்கவில்லை. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் துவங்கப்பட்டுள்ள ஸ்டாலின் எதிர்ப்புப் பிரச்சாரம் டிராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்து விட்டுள்ளதுஎன்றும் டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காவது அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியைச் செய்திருக்கிறதுஎன்று அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஸ்டாலினை முழுவதுமாக மறுத்ததற்கு வெளியில் சொல்ல முடியாத உள்நோக்கம் இருக்கிறது.

ஸ்டாலின் 1953இல் இறந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 20-வது பேராயத்தில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவரை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 22-வது பேராயத்தில் மீண்டும் அதே போல் செய்தனர். அவரது பூத உடலை எடுத்து எரித்தனர். ஸ்டாலின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலைத் திரும்பவும் தொடங்குவதன் மூலம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியிலும் ரசிய நாட்டிலுள்ள மக்கள் மத்தியிலும் அந்த மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளன் பெற்றுள்ள அழிக்கமுடியாத செல்வாக்கினைத் துடைத்தெறிய முனைகிறார்கள் இதன் மூலம் திருத்தல்வாதப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய - லெனினியத்தை மறுத்துவிட முனைகிறார்கள். அவர்களுடைய திருத்தல்வாதப் பாதை குறிப்பாக 20-வது பேராயத்தில் தொடங்கி 22-வது பேராயத்தில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டு விட்டது. ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் சமாதானம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், காலனி, அரைக் காலனி நாடுகளில் புரட்சி, பாட்டாளிவர்க்கக் கட்சி இன்ன பிறவற்றின் மீதான மார்க்சிய-லெனினியக் கொள்கைகளை அவர்கள் திருத்தியது ஸ்டாலினை அவர்கள் முழுவதுமாக மறுதலித்ததுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருப்பதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.

ஸ்டாலின் ஒரு எதேச்சதிகாரவாதி என்று கூறுவது மார்க்சியத்திற்கு எதிரானது, அவர் காலத்தில் நடந்த தவறுகளுக்கு அவரை மட்டும் பொறுப்பாக்குவது தனி நபர் தாக்குதல் என்றும் மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானதுஎன்றும் தோழர் ஏ.எம்.கே. குணாளன் கலைப்புவாதம் குறித்த 07.02.2014 அமைப்பு தீர்மானம் தீர்மானத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

ரஷ்யாவில் ஸ்டாலின் மீதான தனிநபர் தாக்குதல் நடத்திதான் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியை முதலாளித்துவ கட்சியாக குருச்சேவ் கும்பல் மற்றியமைத்தது.ஸ்டாலின் மரணத்திற்குப்பிறகு இருந்த சூழ் நிலைமைகளைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட குருச்சேவ் கும்பல், ஸ்டாலின் காலத்தின் களையெடுப்பு சம்பவத்தில் நடந்த சில தவறுகளை சாக்காக வைத்துக்கொண்டு தனி நபர்வழிபாடு மற்றும் ஸ்டாலின் வரட்டுவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லி, குருச்சேவ் கும்பல் 1956இல் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20-வது காங்கிரசின் மூலம் முதலாளித்துவப் பாதையை சோவியத் யூனியனில் திறந்துவிட்டது”.

குருச்சேவ் கும்பலின் அத்தகைய தனி நபர் மீதானத் தாக்குதல் பற்றி தோழர் மாவோ பின்வருமாறு விமர்சனம் செய்தார்.

பாட்டாளி வர்க்கக் கட்சியின் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அணுகு முறைகளுக்கு மாறாக ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அனுபவங்களை தொகுப்பதற்கு மாறாக, ஸ்டாலினை மட்டுமே குற்றம் சுமத்தி, ஸ்டாலினை எதிரியாக்கினார்என்று மாவோ விமர்சனம் செய்தார்.

அதாவது சோவியத் யூனியனில் தோழர் லெனினுக்குப்பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட விலகல் போக்குகளை வரலாற்று ரீதியாக பரிசீலனை செய்து, விலகல்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதை போக்கும் வழி முறைகளுக்கு மாறாக ஸ்டாலின் என்ற தனி நபரின் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ பாதையை கட்டவிழ்த்துவிட்டது.

இவ்வாறு தனிநபர்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விளைவுகள் பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு மிகப்பெரும் கேடுகளைக் கொண்டுவந்தது.

குருச்சேவ் கும்பலின் எதிர்புரட்சிகர தத்துவங்களான சமாதான சகவாழ்வு”, “அமைதிவழி போட்டி”, “அமைதிவழி மாற்றம்போன்றவற்றின் மூலம் தங்களது திருத்தல்வாதத்தை வளர்த்தது மட்டுமல்லாது, “எல்லோருக்குமான அரசுமற்றும் எல்லோருக்குமான கட்சிபோன்றத் தத்துவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோவியத் யூனியனுக்குத் தேவையில்லாத ஒன்று என்ற போலிக் கம்யூனிஸ்டுக் கொள்கை ஒன்றையும் குருச்சேவ் கும்பல் 22-வது மாநாட்டில் முன்வைத்தது.

முதலாளித்துவப் பாதையை மீண்டும் கொண்டுவந்து, சோவியத் யூனியன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலிருந்து முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு மாற்றப்பட்டது. 1964இல், கிட்டத்தட்ட அனைத்து வகையிலும் திருத்தல்வாதக் கட்சியாக கட்சி மாற்றப்பட்டுவிட்டது. சோவியத் யூனியன் சோசலிச நாடாக மாறுவது தடுக்கப்பட்டு சமூக -ஏகாதிபத்திய நாடாக மாற்றப்பட்டது.

ஸ்டாலினின் வரட்டுவாத மார்க்சியத்துக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் எதிரான போராட்டம் என்ற பெயரிலும், ஸ்டாலினிசத்தை ஒழிப்பது என்ற பெயரிலும் மார்க்சிய - லெனினியத்தின் மீது நவீன திருத்தல்வாதமும் ஈரோ கம்யூனிசம் மற்றும் புதிய இடதுகள் தொடுத்தத் தாக்குதல் சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவுக்கும், கலைப்பு வாதத்துக்கும் வழிவகுத்தது.

மேற்கூறப்பட்ட இரண்டு போக்குகளுமே -1) குருச்சேவ் திருத்தல்வாதம், 2) புதிய இடது கலைப்புவாதம்-முதலாளித்துவ சித்தாந்தங்களாக இருந்த போதிலும் முதலாவது போக்கு நவீன திருத்தல்வாதமாக துவங்கி கலைப்புவாதத்தில் முடிந்தது. இரண்டாவது போக்கு ஆரம்பத்திலிருந்தே கலைப்புவாதமாக தொடர்கிறது.

ஸ்டாலின் எதிர்ப்பின் பெயரால் குருச்சேவ் திரிபுவாதிகள் வர்க்கப்போராட்டம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மீது நடத்திய தாக்குதல்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் பெரிதும் வரவேற்றனர். இவர்கள் சித்தாந்தத் துறையில் வர்க்கப் போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் எதிராக சுதந்திரம்’, ‘மானுடத்துவம்மற்றும் அன்னியமாதல்ஆகியவற்றை முன்னுக்கு கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

குருச்சேவ் கும்பல் அனைத்து மக்களின் அரசுஎன்ற போர்வையில் இரசியாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாட்டாளிவர்க்க குணாம்சத்தை மாற்றியது. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக்கட்சிக்கு பதிலாக அனைத்து மக்களின் கட்சிஎன்ற போர்வையில் பாட்டாளி வர்க்கக் கட்சியை முதலாளித்துவக் கட்சியாக மாற்றியமைத்தது.

முழுமையான கம்யூனிஸ்டுக் கட்டுமானம்என்ற போர்வையில் முதலாளித்துவத்தை மீட்டமைக்க வழிசெய்தது. பழைய திருத்தல்வாதிகளைப் போலவே புதிய திரிபுவாதிகளும் லெனின் வரையறைத்துச் சொன்னது போல்....

யதார்த்தத்தில் அவர்கள் முதலாளித்துவத்தின் ஒரு அரசியல்பிரிவு...தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அதன் செல்வாக்கை பரப்புகின்றவர்களும், அதன் ஏஜெண்டுகளுமாவர்”.

மாநாடு நடத்துவதற்கான காரணத்திற்கு தனிநபரை பொறுப்பாக்குவது எத்தகைய தீய விளைவுகளை உருவாக்கும் என்பதை சோவியத்தில் ஸ்டாலின் மீதான குருச்சேவ் கும்பலின் தனிநபர் தாக்குதல் நல்ல பாடமாக அமைந்துள்ளது. அத்தகைய போராட்டம் திருத்தல்வாதத்திற்கும் கலைப்புவாதத்திற்குமே வலுசேர்க்கும்”.

எனவே ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பேரில்தான் ரஷ்யாவில் முதத்துவ மீட்சியை குருசேவ் கும்பல் கொண்டுவந்தது. ஆனால் மனோகரன், ஸ்டாலினின் எதேச்சதிகாரமும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும்தான் முதலாளித்துவ மீட்சிக்குக் காரணம் என்கிறார். இது ஏ.எம்.கே நிலைபாட்டிற்கு எதிரானதாகும். இது குறித்து கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் என்ற கட்சி ஆவணத்தின் முன்னுரையிலும் எழுதியுள்ளார். (பக்கம் வீஜ்).

மனோகரன் ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கான ஆய்வை ஸ்டாலினிடமிருந்து துவங்குகிறார். ஆனால் மாவோவும், ஏ.எம்.கே.வும் டிராட்ஸ்கியிடமிருந்தும் குருசேவிடமிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிலிருந்தும் துவங்குகிறார்கள். ஸ்டாலின் பற்றிய நினைவு நீடூழி வாழ்க! என்ற சமரன் கட்டுரையில் டிராட்ஸ்கியின் முதலாளித்துவ மீட்சிக்கான குழிபறிப்பு சதிகள் பற்றி ஏ.எம்.கே. கூறுவதாவது: எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலின் திரிபுவாதத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் இடது சந்தர்ப்ப வாதத்தையும், எதிர்த்துப் போராடிய ஒரு மாபெரும் போராளியாவார். மார்க்சிய-லெனினியத்தின் தூய்மையையும், பட்டாளி வர்க்க சர்வதேசிய கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்காகப் போராடினார். அவர் எப்போதும் கொள்கைகளுக்காகப் போரிட்டார். எனவே தான் அவர் மார்க்சிய-லெனினிய வாதிகளின் நினைவில் நீங்கா நிலை பெற்றார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையும், சோவியத் நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு முதலாளித்துவத்தை மீட்பதற்காக டிராட்ஸ்கி புகாரின் காமினோவ், ராடெக் போன்றோர் செய்த குழிபறிப்பு வேலைகளையும், சதிகளையும் அவர் தகர்த்தெறிந்தார். ஸ்டாலின் கட்சியைக் கட்டியமைப்பதற்கானக் கோட்பாடுகளைப் பாதுகாத்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டையும், பாட்டாளி வர்க்கத் தொகையின் அதிகரிப்பையும், கட்சியைப் போல்ஷ்விச மயமாக்குவதையும் அவர் ஆதரித்தார். உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்கும், வளர்ப்பதற்கும் கவனமாக உதவிபுரிந்தார். நவீன திரிபு வாதத்தை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரௌடர் என்பவரின் திரிபு வாதத்தை நிராகரிப்பதற்கான தத்துவப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு டிட்டோவின் திரிபு வாதம் தலை தூக்கிய போது அதை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமைத் தாங்கினார்”. என்கிறார்.

மேலும் அதே கட்டுரையில் லெனினினுடைய சீடரும், உண்மையாகப் பின்பற்றி வரும், அவருடைய லட்சியப் பயணத்தை தொடர்ந்தவருமான ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் லெனின் மறைந்த பிறகு ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள் (Foundation of Leninism) என்னும் ஒரு முக்கியமான தத்துவ நூலைப் படைத்து வெளியிட்டார். சோவியத் அதிகாரத்தை உருகுலையச் செய்து முதலாளித்துவத்தை மீட்டு, சோவியத் மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கியம் தொடுத்த தாக்குதலிலிருந்து மார்க்சிய லெனினியத்தின் தூய்மையை பாதுகாக்க தோழர் ஸ்டாலினின் அந்நூல் பேராயுதமாக விளங்கியது.

1926-ம் ஆண்டில் தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் பிரச்சினைகளைப் பற்றி (On the Problems of Leninism) என்ற ஒரு தத்துவ நூலை வெளியிட்டார். அந்நூல் டிராட்ஸ்கியத்தையும் அதன் மிச்ச சொச்சங்களையும் தரமட்ட மாக்குவதற்காக தொடர்ந்து நடத்திய தத்துப் போருக்கு பேருதவியாய் அமைந்தது.

1938-ம் ஆண்டில், தோழர் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) யின் வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். இப்புத்தகம் சர்வ தேசிய பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அரியதொரு போராட்டத்தின் அனுபவத் தொகுப்பான களஞ்சியமாகக் கிடைக்கப் பெற்றது. இப்புத்தகத்தின் வெளியீடு போல்ஷ்விக் கட்சியின் தத்துவ வாழ்விலும், சர்வ தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கூட ஒரு மைல் கல்லாக அமைந்தது. புதிய சூழ்நிலைமைகளில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் வளர்ந்ததையும், மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியால் மார்க்சியம் பரவி வளர்ந்ததையும், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியின் சகாப்தத்தின் மார்க்சியத்தையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்னும் புத்தகம் எடுத்துக் காட்டிற்று”.

மேலும், மாபெரும் விவாதம் நூலில், தோழர் மாவோ லெனினியமா? சமூக ஏகாதிபத்தியமா? என்ற கட்டுரையில் கூறுவதாவது:

உலகின் முதலாவது சோசலிச நாடான ரசியாவில்,முதலாளித்துவ மீட்சி எப்படி நடந்தேறியது? அது சமூக-ஏகாதிபத்தியமாக எப்படி மாற முடிந்தது? நாம் மார்க்சிய- லெனினியக் கருத்தை, குறிப்பாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவது பற்றிய தோழர் மாசேதுங் சிந்தனையைக் கொண்டு, இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்தால், அது பிரதானமாக ரசியாவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு விளைவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ரசியாவில், கட்சியில் அதிகாரத்தில் இருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கட்சி மற்றும் அரசு தலைமையை அபகரித்ததன் விளைவாகும். அதாவது, ரசியாவின் முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை அபகரித்ததன் விளைவாகும். அதே வேளையில், அது உலக ஏகாதிபத்தியம் அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்காக, ரசியத் திரிபுவாதத் துரோகக் கும்பலின் மூலம் ரசியாவில் சமாதானப் பரிணாமகொள்கையை முன் நடத்தியுள்ளதன் விளைவாகும் என்றும் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார நாடாக ரசியா இருந்ததால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தி, முதலாளித்துவ மீட்சியைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றிய அனுபவம் அதற்குக் குறைவாயிருந்தது. இத்தகைய நிலைமைகளில், ரசியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பதுங்கியிருந்து அதிகாரத்தில் இருந்த முதலாளித்துவப் பாதையாளரான குருசேவ், ஸ்டாலின் மறைவுக்குப்பின் விஷம் கக்கும் முறையில் ஸ்டாலினை அவதூறு செய்யும், ரகசிய அறிக்கை ஒன்றைத் திடீர்த்தாக்குதல் தொடுக்கும் முறையில் வெளியிட்டு, பல்வகை வஞ்சகத்தனமான சூழ்ச்சி நடவடிக்கைகளையும் கையாண்டு, ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு அதிகாரத்தை அபகரித்தார். இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முதலாளி வர்க்கச் சர்வாதிகாரமாக மாற்றிய எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்; சோசலிசத்தைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவத்துக்குப் புத்துயிர் அளித்த எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்”.

மாவோ முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்லவில்லை. ஸ்டாலினிச எதிர்ப்பு எனும் பேரால் குருசேவ் கும்பல் நவீன திருத்தல்வாதத்தை கொண்டுவந்து ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுத்தார்கள் என்றே கூறுகிறார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்தது என்று கூறுகிறார். ஆகவேதான் குருசேவ் கும்பலை புதியகாலனிய தாசர்கள் என்கிறார்.

தொடரும்...

சமரன், 

பிப்ரவரி, 2020

No comments:

Post a Comment